Last Updated : 14 Jun, 2019 04:45 PM

 

Published : 14 Jun 2019 04:45 PM
Last Updated : 14 Jun 2019 04:45 PM

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி விரைவில் ராஜினாமா?

மக்களவைத் தேர்தலில் படுதோல்விஅடைந்ததற்கு பொறுப்பேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுதாகர் ரெட்டி விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூலை மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது அந்த கூட்டத்தில் இந்த முடிவை சுதாகர் ரெட்டி அறிவிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  2 இடங்களில் மட்டுமேவென்றது. அந்த 2 இடங்களும் தமிழகத்தில் இருந்து கிடைத்தவை. கடந்த 2014-ம் ஆண்டு ஒரு இடத்தில்  வென்றநிலையில் இந்த முறை சற்று முன்னேற்றமாக கூடுதலாக ஒரு இடத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் வென்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மக்களவைத் தேர்தலில் மோசமான தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்சி அங்கீகாரமும் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தபட்சம் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6 சதவீதம் வாக்கு பெற்றிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 4 மக்களவை உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்த வரையரைக்குள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவில்லை.

இந்த சூழலில் மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஜூலை மாதம் நடைபெற உள்ள கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தனது பொதுச்செயலாளர் பதவியை சுதாகர் ரெட்டி ராஜினாமா செய்யப் போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய நடத்தப்பட்ட கூட்டத்திலும் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் சுதாகர் ரெட்டியின் முடிவை ஏற்க மறுத்து, இது அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், தனது உடல்நிலை கட்சிப்பணிகளை தீவிரமாகச் செய்ய ஒத்துழைக்கவில்லை என்பதால், தான் ஓய்வு பெற விரும்புதவாக சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள தேசிய கவுன்சில் கூட்டத்தில் சுதாகர் ரெட்டி முறைப்படி அறிவிப்பார் என்று கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

 

ஆனால், இந்த விஷயம் குறித்து சுதாகார் ரெட்டியிடம் கேட்டபோது மறுக்கவில்லை, ஆனால், பதில் அளிக்க மறுத்துவிட்டார். அதேசமயம், தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசப்படும் அனைத்து விஷயங்களும் ரகசியமானவை. ஜூலை 19-20ம் தேதி நடக்கும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x