Published : 27 Jun 2019 12:37 PM
Last Updated : 27 Jun 2019 12:37 PM
ஹரியாணாவின் அம்பாலா விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் விமானம் நடுவானில் திடீரென பறவையால் தாக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தியப் போர் விமானமான ஜாகுவார், இன்று காலை தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது வானில் திடீரென பறவை ஒன்று வந்து தாக்கியதால் விமானத்தின் ஒரு இன்ஜினின் பாகங்கள் ஆழமாக ஊடுருவிச் சிதைக்கப்பட்டது.
அதன் இரு இன்ஜின்களில் ஒன்று பழுதானதை அடுத்து விமானியின் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதால் விமானம் காப்பாற்றப்பட்டது. விமானத்தை மேலுயர்த்தி திரும்பவும் பாதுகாப்பாகத் தரையிறக்கும் வகையில் நிர்வகிக்கவும் தனது எரிபொருள் டாங்குகளையும் மற்றும் வெளிப்புறத்தில் 10 கிலோ பயிற்சிக் குண்டுகளையும் வெளியே தூக்கி வீசியெறிந்தார்.
வானில் பறக்கும்போது இரண்டு இன்ஜின்களில் ஒன்று பழுதானால் இந்திய விமானப்படை மேற்கொள்ள வேண்டிய வழக்கமாக உள்ள விதிமுறைகளின்படியே எரிபொருள் டாங்குகளையும் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும் விமானத்திலிருந்து கீழே போடப்பட்டன.
வானிலிருந்து கைவிடப்பட்ட சிறிய குண்டுகள் பின்னர் விமானி மூலம் மீட்கப்பட்டுவிட்டதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
விமானம் சுமந்துவந்த சில பொருட்கள் நகரத்தில் விழுந்ததாக அம்பாலா போலீஸ் துணை கமிஷனர் ரஜ்னீஷ் குமார் கூறினார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை விசாரிக்க இந்திய விமானப் படை விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஹரியாணாவில் உள்ள அம்பாலா நகரின் மையத்தில் இந்த விமானத் தளம் உள்ளது. பல ஆண்டுகளாக, இது அடர்த்தியான மக்கள் தொகையால் சூழப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT