Published : 11 Jun 2019 02:11 PM
Last Updated : 11 Jun 2019 02:11 PM

மக்களவை இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திர குமார் நியமனம்

மக்களவை இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

மே மாதம் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாகப் பதவியேற்றது. இதைத் தொடர்ந்து புதிய மக்களவை 17-ம் தேதி கூடுகிறது. வரும் 20-ம் தேதி மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் கூட்டுக் கூட் டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் புதிய மக்களவைக்கு இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் திகம்ஹர் மக்களவைத் தொகுதியில் இருந்து வீரேந்திர குமார் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜக சார்பில் 7 முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்ட அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடந்த முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார்.

முன்னதாக இடைக்கால சபாநாயகராக முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி நியமிக்கப்படலாம். பிறகு அவரே சபநாயகராகவும் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைக்கால சபாநாயகர் மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 542 உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். வரும் 19-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜூலை 4-ம் தேதி பொருளாதார ஆய் வறிக்கையும் ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஜூலை 26-ம் தேதி கூட்டத்தொடர் நிறைவடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x