Published : 05 Jun 2019 11:19 AM
Last Updated : 05 Jun 2019 11:19 AM
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் இன்னும் பொறுமை காக்கமாட்டோம். இன்னும் 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்குவோம் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை பிரித்துக்கொள்வது தொடர்பாக பேச்சு நடத்தி உச்ச நீதிமன்றம் குழு அமைத்துள்ளது. அந்தக் குழு நிர்மோகி அரோரா, வக்பு வாரியக் குழு உள்ளிட்டோருடன் பேசி வருகிறது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் இனிமேலும் நாங்கள் பொறுமை காக்க முடியாது. 2-வது முறையாக பிரதமராக வந்திருக்கும் மோடிக்கு ராமர் கோயில் கட்டுவது குறித்து நினைவுபடுத்த விரும்புகிறோம்.
இரு விஷயங்களில் விஹெச்பி சமரசம் செய்து கொள்ளாது. முதலில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக இருக்கிறோம். 2-வதாக அயோத்தியின் கலாச்சாரம் தொடர்பான பகுதிக்குள் எந்தவிதமான மசூதியும் இருக்கக் கூடாது.
விஸ்வ இந்து பரிசத்தின் மார்க்தர்ஷக் சமிதியின் கூட்டம் ஹரித்துவாரில் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்படும். அதுமட்டுமல்லாமல், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டும் திட்டம் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்துவோம்.
அதேநேரத்தில் மத்திய அரசு எடுத்துவரும் சில முன்னேற்றமான நடவடிக்கையால்தான் பொறுமையாக இருக்கிறோம். ஆனால், இனிமேலும் பொறுத்திருக்க முடியாது. ஏற்கெனவே 30 ஆண்டுகளுக்கும மேலாக நாங்கள் பொறுமை காத்துவிட்டோம். அடுத்த 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும்.
அதற்கு முன்னதாக பிரதமர் மோடியைச் சந்தித்து ராமர் கோயில் தொடர்பாக அழுத்தம் கொடுப்போம். ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் அனைத்தும் தொடர்ந்து தாமதமாகவே நடக்கிறது".
இவ்வாறு அலோக் குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT