Published : 27 Jun 2019 03:21 PM
Last Updated : 27 Jun 2019 03:21 PM
இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் சுவிஸ் வங்கி கணக்குகளை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது. அதில் இருந்து ரூ. 283.16 கோடி பணத்தை எடுக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கு தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசால் நீரவ் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 19-ம் தேதி நீரவ் மோடி, லண்டனில் ஸ்காட்லாந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நீரவ் மோடிக்கு சொந்தமாக உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. இந்தியாவில் ஏராளமான அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
சுவிஸ் வங்கியில் நீரவ் மோடி வங்கி கணக்கு வைத்துள்ள விவரம் தெரிய வந்தது. அவரது பெயரில் மட்டுமல்லாமல், சகோதரி உள்ளிட்ட சிலரது பெயரில் பினாமியாகவும் வங்கி கணக்குகள் வைக்கப்பட்டு பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இதையடுத்து அந்த வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என சுவிஸ் வங்கிக்கு அமலாக்கத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை பரிசீலினை செய்ய சுவிஸ் அரசு, அமலாக்கத்துறையின் வேண்டுகோளை ஏற்று சுவிஸ் வங்கியில் நீரவ் மோடி வைத்துள்ள வங்கி கணக்கை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.
சுவிஸ் வங்கியில் நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பெயரில் உள்ள நான்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வங்கி கணக்குகளில் தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் 283.16 கோடி ரூபாய் உள்ளது. இந்த வங்கி கணக்கில் உள்ள பணம் எடுக்க முடியாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரின் பேரில் இந்த வங்கி கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT