Published : 03 Jun 2019 10:03 AM
Last Updated : 03 Jun 2019 10:03 AM
மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அசுர குலத்தைச் சேர்ந்த இரணியகஷ்யப் வழிவந்தவர் என சர்ச்சைக் கருத்தை முன்வைத்துள்ளார் உனாவோ தொகுதி பாஜக எம்.பி. ஷாக்ஷி மகாராஜ்.
ஷாக்ஷி மகாராஜூக்கு சர்ச்சைக் கருத்துகளைக் கொட்டுவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் இந்த முறை அவர் மம்மதாவை குறிவைத்துள்ளார்.
அண்மையில் மம்தா பானர்ஜி, தனது காரை வழிமறித்து ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டவர்களை எச்சரித்தார். இதனை சுட்டிக்காட்டியுள்ள உத்தரப் பிரதேச மாநில உனாவோ தொகுதி பாஜக எம்.பி. ஷாக்ஷி மகாராஜ், "மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அசுர குலத்தைச் சேர்ந்த இரண்யகஷ்யப் வழிவந்தவர். அதனால்தான் அவர் ஜெய்ஸ்ரீராம் என்று முழங்குபவர்களுக்கு எதிராக சதி செய்கிறார்" எனக் கூறியுள்ளார்.
இரணியகஷ்யப் என்ற அசுர குல அரசர் தனது மகன் பிரகலாதன் ஸ்ரீஹரி மீது நாட்டம் கொண்டிருந்ததால் சொந்த மகன் என்றுகூட பாராமல் வதைத்தவர் என்பது புராணக் கதை.
இதேபோல்தான் மேற்குவங்கத்தில் ஜெய்ஸ்ரீராம் என்று முழங்குபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் எனக் கூறியுள்ளார் ஷாக்ஷி மகாராஜ்.
இதற்கிடையில், மேற்குவங்கத்திலிருந்து தேர்வான பாஜக எம்.பி. அர்ஜூன் சிங், முதல்வர் மம்தாவுக்கு ஜெய்ஸ்ரீராம் வாசகம் அடங்கிய 10 லட்சம் போஸ்ட் கார்டுகளை அனுப்பப்போவதாகக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மம்தா பதிலடி:
இந்நிலையில் மம்தா பானர்ஜி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஜெய்ஸ்ரீராம் என்ற முழகத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராகவும் நாங்கள் இல்லை. ஆனால், பாஜக அரசு அரசியலையும் மதத்தையும் கலந்து இத்தகைய ஸ்லோகங்கள் மூலம் மேற்குவங்கத்தில் அமைதியின்மையை விளைவிக்க முயற்சிக்கிறது. வெறுப்புணர்வை விதைக்க பாஜக செய்யும் முயற்சி இது" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
சர்ச்சைகளுக்குப் பெயர் போன ஷாக்ஷி மகராஜ்..
ஷாக்ஷி மகாராஜ் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவிப்பதில் தேர்ந்தவர். அண்மையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பேசிய ஷாக்ஷி, தனக்கு வாக்களிக்காவிட்டால் கர்ம விணைகள் துரத்தும் என வாக்காளர்களை எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT