Published : 03 Jun 2019 05:12 PM
Last Updated : 03 Jun 2019 05:12 PM
பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசிய கேரள காங்கிரஸ் நிர்வாகி அப்துல்லா குட்டி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஏ.பி.அப்துல்லா குட்டி மோடியைப் பாராட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதில், ''சமூக சேவகர்கள் ஒரு கொள்கையை உருவாக்கும்போது, அவர்கள் சந்தித்த ஏழை மக்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அதைச் சரியாகச் செய்துகாட்டியவர் மோடி'' என்று தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரே இவ்வாறு கூறியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரின் கருத்துக்கு காங்கிரஸ் சார்பில் விளக்கம் கோரப்பட்டது. அப்துல்லா குட்டியின் பதில் திருப்திகரமானதாக இல்லை என்று கூறிய காங்கிரஸ் கட்சி, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய அப்துல்லா குட்டி, ''இது ஒரு சோகமான செய்தி. இதை ஏற்கெனவே நான் எதிர்பார்த்தேன். நான் ஒரு சந்தர்ப்பவாதி அல்ல. வளர்ச்சிக்கு ஆதரவாக நிற்கும் மனிதன்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவரைப் புகழ்ந்ததற்காக, அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஏ.பி.அப்துல்லா குட்டியை கட்சித் தலைமை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT