Last Updated : 02 Jun, 2019 06:55 PM

 

Published : 02 Jun 2019 06:55 PM
Last Updated : 02 Jun 2019 06:55 PM

வாடிக்கையாளரிடம் கைகலப்பில் ஈடுபட்டதாக, ராணுவ அதிகாரிகளை நையப்புடைத்த ஹோட்டல் ஊழியர்கள்: வைரலான வீடியோ காட்சிகள்

இரண்டு ராணுவ அதிகாரிகள் தகராறில் ஈடுபட்டதாக அவர்களை ஹோட்டல் ஊழியர்கள் நையப்புடைத்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்துள்ளது.

உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து பராத் காவல்நிலைய ஆய்வாளர் ராமானந்த் குஷ்வாஹா தெரிவித்த விவரம்:

பராத் நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவருந்த இரண்டு ராணுவ அதிகாரிகள் வந்தனர். அவர்கள் அமர்ந்துள்ள மேஜையில் எதிரே அமர்ந்திருந்த மற்றொரு வாடிக்கையாளரிடம் தகராறில் ஈடுபட்டதோடு அந்த நபரை சரமாரியாக அடித்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஹோட்டல் ஊழியர்களிடமும் கைகலப்பில் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மற்ற வெயிட்டர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ராணுவ த்தினரை பிரம்பால் அடித்துள்ளனர்.

ஹோட்டலில் நடந்த சண்டையால் அங்குள்ள பொருட்கள் துவம்சம் ஆனதால் சில நிமிடங்களிலேயே ஹோட்டலுக்கு வெளியே சண்டை தொடர்ந்தது.

அதன்பின்னும் இந்த வெயிட்டர்கள் பிரம்புகளைக்கொண்டு அடித்துத் துவைக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ராணுவ அதிகாரிகளைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 7-8 ஹோட்டல் ஊழியர்களை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு பராத் காவல்நிலைய ஆய்வாளர் ராமானந்த் குஷ்வாஹா தெரிவித்தார்.

ராணுவ அதிகாரிகளை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள் அனைவரின் மீதும் உரிய சட்டவிதிகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத் தாக்குதல் சம்பவம் குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x