Published : 18 Jun 2019 10:24 AM
Last Updated : 18 Jun 2019 10:24 AM

மக்களவையில் எம்.பி.யாக பதவியேற்பு: கையெழுத்திட மறந்த ராகுல் காந்தி

மக்களவையில நேற்று வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்ற ராகுல் காந்தி அவை குறிப்பேட்டில் கையெழுத்திட மறந்தார். பின்னர் ராஜ்நாத் சிங் நினைவூட்டியதை தொடர்ந்து மீண்டும் வந்து கையெழுத்திட்டார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அமோக வெற்றி பெற்றுமத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. மக்களவை இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் வரிசையாக பதவியேற்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தி, ஆங்கிலம், போஜ்புரி, தெலுங்கு என பல மொழிகளிலும் பதவியேற்றுக் கொண்டனர்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று பதவியேற்றுக் கொண்டார். மக்களவை நேற்று காலை தொடங்கியபோது அவர் சபைக்கு வரவில்லை. பிற்பகலில் தான் அவர் சபைக்கு வந்தார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு பெரும் தோல்வி கிடைந்த பிறகு நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் வந்துள்ளார். கட்சி எம்.பி.க்களுடன் சகஜமாக அவர் உரையாடினார். பின்னர் வயநாடு தொகுதி எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

எம்.பி.,யாக பதவியேற்பவர்கள் அதன் பிறகு அதற்கான அவை குறிப்பேட்டில் கையெழுத்திட வேண்டும். ஆனால் கையெழுத்து போடாமல் மறதியாக அங்கிருந்து ராகுல் காந்தி வெளியேற முயன்றார். இதனைப் பார்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கையெழுத்திட வேண்டும் என்பதை ராகுலுக்கு நினைவூட்டினார். இதையடுத்து, ராகுல் காந்தி திரும்பி வந்து கையெழுத்திட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x