Published : 06 Jun 2019 04:08 PM
Last Updated : 06 Jun 2019 04:08 PM

தெலங்கானாவில் காங்கிரஸூக்கு நெருக்கடி : 12 எம்எல்ஏக்கள் டிஆர்எஸ் கட்சியில்  இணைய முடிவு

தெலங்கானாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைய உள்ளனர். தங்கள் கட்சியை ஆளும் டிஆர்எஸ் கட்சியில் இணைத்து விட்டதாக அறிவிக்க கோரியுள்ளனர்.

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதன் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் ஆளும் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பலம் 18 ஆகக் குறைந்தது.

இந்தநிலையில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைய உள்ளனர். சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியை சந்தித்துப் பேசிய 12 எம்எல்ஏக்களும் தெலங்கானா காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமதியில் இணைத்து விட்டதாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இவர்களது கோரிக்கையை சபாநாயகர் ஏற்கும்பட்சத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும். இதனால் தெலங்கானா காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x