Published : 11 Jun 2019 12:00 AM
Last Updated : 11 Jun 2019 12:00 AM

ஆந்திர போக்குவரத்து கழகத்தை அரசுத் துறையாக மாற்ற திட்டம்: அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இதில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து முதியோர் உதவித் தொகையை, ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,250 ஆக உயர்த்தி வழங்குவது, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ‘ஆஷா’ ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை ரூ. 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

‘ஒய்.எஸ்.ஆர் பரோசா’ என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 12,500 வழங்கும் திட்டத்தையும் ஆந்திர அரசு அமல்படுத்த உள்ளது. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஊர்காவல் படையினரின் ஊதியத்தை அதிகரிக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், ஆந்திர மாநில பேருந்து போக்குவரத்து கழகத்தை (ஏ.பி.எஸ்.ஆர். டி.சி) அரசுத் துறையாக மாற்றவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ஆராய ஒரு குழுவை நியமித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். இக்குழு தனது அறிக்கையை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x