ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மெஹ்பூபா முப்தி அரசுக்கான தன் ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதையடுத்து 2018, ஜூன் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் அரசியல் நெருக்கடிக்குள் வீழ்ந்தது.

ஜம்மு காஷ்மீருக்கு தனியான அரசியல் சட்டம் என்பதால் சட்டப்பிரிவு 92-ன் கீழ் 6 மாதகால ஆளுநர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை இது கட்டாயமான சட்டவிதியாகும்.  இதில் அதிகாரம் முழுதும் ஆளுநருக்கு மட்டுமே. 

இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை அளித்ததையடுத்து டிசம்பர் 17-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமை மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது. டிசம்பர் 19 நள்ளிரவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் ஆளுநர் சத்யபால் மாலிக் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவைக்குப் பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அமர்நாத் குகை கோயிலுக்குச் செல்லும் புனித யாத்திரை வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெற உள்ளது. தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்களாகும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in