Published : 01 Jun 2019 11:47 AM
Last Updated : 01 Jun 2019 11:47 AM

ஆட்சியைத் தொந்தரவு செய்யவேண்டாம் என தலைமை அறிவுறுத்தி உள்ளது: எடியூரப்பா தகவல்

கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத ஆட்சியைத் தொந்தரவு செய்யவேண்டாம் என தலைமை அறிவுறுத்தி உள்ளதாக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 104, காங்கிரஸுக்கு 80, மஜதவுக்கு 37 இடங்கள் கிடைத்தன. ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால் தனிப்பெரும் கட்சியான பாஜக, எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்தது. பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு எடியூரப்பா அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) கூட்டணி ஆட்சி அமைத்தன. மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

மே மாதத்துடன் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அமைச்சரவையில் துறைகள் பங்கீடு, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ், மஜத இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே காங்கிரஸ் – மஜத ஆட்சியை கவிழ்க்க பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா முயன்று வருகிறார். ஆபரேஷன் தாமரை மூலம் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேரை பாஜகவுக்கு இழுக்க முயற்சித்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸாரிடம் எடியூரப்பா குதிரை பேரம் நடத்திய ஆடியோ மற்றும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, ''இப்பொழுதுதான் டெல்லியில் இருந்து திரும்பி உள்ளேன். கர்நாடக ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று எங்கள் தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சித்தராமையா அவருடைய எம்எல்ஏக்களை என்னிடம் அனுப்பி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன்.

 

சில காலத்துக்கு நாங்கள் அமைதியாக இருக்கப் போகிறோம். அவர்கள் (காங்கிரஸ் - மஜத) ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் கர்நாடக அரசைக் கவிழ்க்க வேண்டிய எந்த விதமான முயற்சிகளையும் எடுக்கவேண்டாம் என்று எங்களுக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது'' என்றார் எடியூரப்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x