

மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவு செல்லும் என மும்பை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கோரி நீண்டகாலமாக போராடினர். இடஒதுக்கீடு கோரி அவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இதையடுத்த, மராத்தா சமுதாயத்தினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்து பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் ஆய்வு செய்து மகாராஷ்டிர அரசிடம் அறிக்கை சமர்பித்தது. மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணை குழு, தனது அறிக்கையை மாநில தலைமை செயலாளரிடம் அளித்தது.
இதையடுத்து மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. அதற்கான தீ்ர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் ரஞ்சித் மோர், பாரதி டாங்க்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த அறிக்கையின்படி, ஏற்றுக்கொள்ளத்தக்க தரவுகளை கொண்டு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதால், இதுசெல்லும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனினும் 16 சதவீத இடஒதுக்கீடு என்பது மிகவும் அதிகம் என்று கூறி நீதிபதிகள் இதனை 12 சதவீதம் முதல் 13 சதவீதம் என்ற அளவில் வரையறுக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டடோர் ஆணையத்துக்கு பரிந்துரைத்தது.