Published : 06 Jun 2019 02:49 PM
Last Updated : 06 Jun 2019 02:49 PM
மேற்குவங்கத்தில் மூன்றாவது மொழியாக இந்தியை கற்க வேண்டுமா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், வங்கத்து ஆண்கள் வீடு, அலுவலகங்களில் தரையை கூட்டி துடைக்கிறார்கள், வங்கத்து பெண்கள் மும்பை பார்களில் நடனம் ஆடும் அவலம் இருப்பதாக அம்மாநில பாஜக முன்னாள் தலைவர் ததகதா ராய் விமர்சித்துள்ளார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்கிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தியும், இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு போன்ற மாநில மொழிகளையும் படிக்க வேண்டும் என இந்த வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெற்றோர், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிப்பு கிளம்பியது.
இதையடுத்து புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் மும்மொழிக்கொள்கை கட்டாயம் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்ற மேற்குவங்கத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மத்தய அரசு மேற்குவங்கத்தில் இந்தியை திணிக்க முயலுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மேற்குவங்க மாநில முன்னாள் பாஜக தலைவரும், மேகாலயா மாநில ஆளுநருமான ததகதா ராய் இந்தி மொழி தொடர்பான மேற்குவங்க அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘இந்தி மொழி திணிப்பு எனக் கூறி பெரும் எதிர்ப்பு மேற்கவங்கத்தில் கிளம்பியுள்ளது. அரசியலுக்காகவே இவர்கள் இந்தியை எதிர்க்கின்றனர். இந்தி மொழி பேசாத மகாராஷ்டிரா, ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்கள் கூட இந்தியை எதிர்க்கவில்லை. வித்யாசாகர், விவேகானந்தர், ரபிந்திரநாத் தாகூர், நேதாஜி போன்றவர்களின் பூமி வங்கம், பிறகு ஏன் வங்காளிகள் இந்தி கற்க வேண்டும் என சிலர் கேட்கின்றனர். தலைவர்களுக்கும், இந்தி மொழிக்கும் என்ன தொடர்பு.
இந்த மாபெரும் தலைவர்களின் காலத்தில் வங்கம் இருந்தநிலை இப்போது இல்லை. வங்க மக்களின் பெரும் தனிச்சிறப்பு நம்மை விட்டு அகன்று விட்டது. ஹரியாணாவில் இருந்து கேரளா வரை மேற்குவங்கத்து ஆண்களே தற்போது வீடுகளை கூட்டி துடைக்கும் வேலை செய்து பிழைக்கிறார்கள்.
மேற்குவங்கத்து பெண்கள் மும்பை மதுபானக் கூடங்களில் நடனம் ஆடும் அவலம் உள்ளது. இதெல்லாம் முன்பு நினைத்து பார்க்க முடியாத கொடுமை’’ எனக் கூறியுள்ளார். இவரது கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு ததகதா ராய் கூறியுள்ளார்.
ததகதா ராய் இதற்கு முன்பும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT