Published : 14 Jun 2019 12:00 AM
Last Updated : 14 Jun 2019 12:00 AM
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாஜக அதன் உச்சத்தை அடையவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கூறினார்.
பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தை தொடர்ந்து, பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றாலும் பாஜக அதன் உச்சத்தை அடையவில்லை என்று அமித் ஷா கூறினார். கட்சியை புதிய பிராந்தியங்களுக்கும், சமூகத்தினருக்கும் விரிவுபடுத்துவது அவசியம் என்றார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 220 தொகுதிகளில் பாஜக 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது. இதற்கு கடினமான உழைத்த கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு அமித் ஷா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கவுள்ளோம். பாஜகவில் தற்போது 11 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இதனை20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். உறுப்பினர் சேர்க்கும் பணிக்கு கட்சியின் துணைத் தலைவர் சிவராஜ் சிங் சவுகான் தலைமை வகிப்பார். அவருக்கு பிற 4 தலைவர்கள் உதவி புரிவார்கள். புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெறும். இவ்வாறு பூபேந்திர யாதவ்கூறினார். இந்நிலையில் கட்சியின் அமைப்பு தேர்தல் முடியும் வரை பாஜக தலைவராக அமித் ஷா நீடிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT