Published : 07 Jun 2019 04:02 PM
Last Updated : 07 Jun 2019 04:02 PM

மும்பையில் அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் வெட்டிக்கொலை

மும்பையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீரர் ராகேஷ் பவார் 3 நபர்களால் வியாழன் நள்ளிரவு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராகேஷ் அம்பாதாஸ் பவார் இவருக்கு வயது 30 அல்லது அதற்கு சற்றுக் கூடுதலாக இருக்கலாம். இவர் இருசக்கரவாகனத்தில் தன் தோழியுடன் சென்று கொண்டிருந்த போது வழிமறித்த 3 பேர் கூர்மையான ஆயுதங்களினால் பவாரைத் தாக்க அங்கேயே ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்தார்.

 

மாவட்ட அளவிலான கிரிக்கெட் ஆடுவதோடு, ஆர்வமுள்ள சிறுவர்கள், இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியும் பவார் அளித்து வந்ததாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

முதற்கட்ட விசாரணைகளில் சொந்தப் பகை காரணமாக அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவதாக போலீஸார் தெரிவித்தனர். பவாருடன் வண்டியில் வந்த தோழியும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

 

பவாரின் நெருங்கிய நண்பர் என்று கூறிக்கொள்ளும் கோவிந்த் ராத்தோர் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்குக் கூறும்போது, பவாருடன் இருந்த பெண் அவரது காதலி. சம்பவம் நடந்த போது நான் அங்கு இல்லை. கான் குடும்பத்துடன் பவாருக்கு ஒரு பழைய பகைமை உள்ளது, என்றார், ஆனால் இவரது கூற்றுக்கள் சரியானதா என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

அங்கிருந்து வரும் தகவல்களின் படி பவார் வியாழன் நள்ளிரவில் கொல்லப்பட்டுள்ளார். பாந்துப் பகுதி அருகே மஹாவிர் பெட்ரோல் நிலையம் அருகே அவரது வாகனம் சிலரால் நிறுத்தப்பட்டது. நிறுத்தியவடனேயே அங்கிருந்த 3 பேர் அவரை மாறி மாறி கத்தி மற்றும் சில கூர்மையான ஆயுதங்களால் குத்தினர்.  பவாருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

 

போலீஸார் எஃப்.ஐ.ஆர்.பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x