Published : 04 Jun 2019 09:13 PM
Last Updated : 04 Jun 2019 09:13 PM
அசாம் மாநிலம், ஜோர்கட் விமானத்தளத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் திடீரென நடுவானில் மாயமானது, இந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியக் கடற்படையின் கண்காணிப்பு விமானம் பி-81 மற்றும் செயற்கைக் கோள்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அசாம் மாநிலம், ஜோர்கட் நகரின் புறநகரில் உள்ள ரோவாரியா விமானத் தளம் இங்கிருந்து இன்று பிற்பகல் 12.25 மணிக்கு அருணாச்சலப் பிரதேசம், மெச்சுகா விமானத் தளத்துக்கு, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஐஏஎப் ஏஎன்-32 ரக விமானம் 13 பேருடன் புறப்பட்டது.
ஆனால், 12.25 மணிக்கு புறப்பட்ட விமானம் அருணாச்சலப் பிரதேசத்தின் மெச்சுகா விமானத் தளத்துக்குச் சென்று சேரவில்லை. இதுதொடர்பாக மெச்சுகா விமானத் தளத்துக்கு தொடர்பு கொண்டுகேட்டபோதும் விமானம் குறித்து தகவல் ஏதும் இல்லை.
இந்த விமானத்தில் 5 பயணிகளும், 8 விமானப்படை வீரர்களும் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேடுதல் பணி தொடர்பாக இந்திய விமானப்படை அறிக்கை ஒன்றில் கூறும்போது, “கடற்படையின் பி-81 விமானம் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது, கார்ட்டோசாட் மற்றும் ரிசாட் செயற்கைக் கோள்கள் அந்த இடத்தின் படங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. சூரிய மறைவுக்குப் பிறகு தேடல் பணியில் இருந்த ஹெலிகாப்டர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இரவில் தேடும் திறன் கொண்ட சென்சர்கள், இரவுமுழுதும் தேடல் பணியில் இருந்தன” என்று கூறியுள்ளது.
செவ்வாய்க் கிழமை மதியம் ஏர்மார்ஷல் மாத்துர், ஜோர்ஹாட் விமானப்படை நிலையத்துக்கு சென்று காணமால் போன விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார். இவர்களிடத்தில் தேடல் பணி விவரங்கள் அவ்வபோது தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிகே.ஷர்மா, ஐ.என்.எஸ் ராஜாளியிலிருந்து பி-81 தமிழ்நாடு, அரக்கோணத்திலிருந்து 1 மணிக்கு அனுப்பப்பட்டது. இதில் காணாமல் போன விமானத்தைக் கண்டு பிடிக்கும் உயர் தொழில்நுட்ப சென்சர்கள் உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT