Last Updated : 14 Jun, 2019 12:00 AM

 

Published : 14 Jun 2019 12:00 AM
Last Updated : 14 Jun 2019 12:00 AM

காவிரி மேலாண்மை ஆணையம் 25-ல் கூடுகிறது: தமிழகத்துக்கு நீர் திறக்கப்படுமா?

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படாத நிலையில் வரும் ஜூன் 25-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது.

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதிதீர்ப்பின்படி கர்நாடகா, தமிழகம்,கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களையும் உறுப்பினர்களாக கொண்டு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும்காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. இதற்கு தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் ஆணையம் கூடி விவாதித்தது.

கடந்த மாதம் 28-ம் தேதி மூன்றாம் முறையாக கூடியபோது, ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடகவிவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், அம்மாநில அரசு, கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. எனவே தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என தெரிவித்துள்ளது.

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணைய குழு அதிகாரிகள் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் உள்ள நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்தனர். அதில் 4 அணைகளிலும் மொத்தமாக 14.45 டிஎம்சி நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, ஜூன் மாத இரண்டாம் வார இறுதியில் பருவமழை தொடங்கும் என அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் வருகிற 25-ம் தேதிமத்திய நீர்வளத்துறை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடாதது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x