Published : 09 Jun 2019 12:00 AM
Last Updated : 09 Jun 2019 12:00 AM

துணை முதல்வர்கள் உட்பட ஆந்திர மாநிலத்தில் 25 அமைச்சர்கள் பதவியேற்பு

ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசில் 25 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

மொத்தமுள்ள 175-ல் 151 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், 25-ல் 22 மக்களவைத் தொகுதிகளையும் அக்கட்சி கைப்பற்றியது.இதையடுத்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த மாதம் 30-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், அவரது அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர், நேற்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 3 பெண்களும் அடங்குவர். குறிப்பாக, உள்துறை அமைச்சர் பதவி சுசரிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அமைச்சரவையில் சபிதா இந்திரா ரெட்டி என்ற பெண்ணுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவரது தந்தை பாணியை பின்பற்றி, பெண் ஒருவருக்கு உள்துறை அமைச்சர் பதவியை ஜெகன்மோகன் வழங்கியுள்ளார். அமராவதியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிராமாணமும் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தலைமைச் செயலாளர் ரமணா, டிஜிபி கவுதம் சவாங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துறைகள் ஒதுக்கீடுபதவி பிரமாணத்துக்கு பின்னர், அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கி அதன் பட்டியலை ஆளுநரின் ஒப்புதலுக்காக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுப்பி வைத்தார். இதற்கு ஆளுநரும் உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

5 துணை முதல்வர்கள் இந்நிலையில், ஆந்திராவின் துணை முதல்வர்களாக 5 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாநிலத்தில் துணை முதல்வர் பதவி 5 பேருக்கு வழங்கப்படுவது இந்தியாவிலேயே இது முதன்முறையாகும். இதில் மூத்த நிர்வாகியான பில்லி சுபாஷ் சந்திரபோஸுக்கு வருவாய் துறை ஒதுக்கப்பட்டது. மேலும், அவருக்கு துணை முதல்வர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, புஷ்ப ஸ்ரீவாணி என்பவருக்கு பழங்குடி இன வளர்ச்சித் துறை ஒதுக்கியதுடன் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆள்ள நாநி என்பவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதுடன், மருத்துவ துறை அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஜாத் பாஷா (சிறுபான்மையினர் நலத்துறை), சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி (கலால் மற்றும் வணிக வரித்துறை) ஆகியோருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

17-வது முதல்வராக பொறுப்பேற்பு

இந்நிலையில், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் 17-வது முதல்வராகவும், புதிய ஆந்திர மாநிலத்தின் 2-வது முதல்வராகவும் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று காலை பொறுப்பேற்றார்.

முதல்வராக பொறுப்பேற்றதும் 3 கோப்புகளில் ஜெகன்மோகன் கையெழுத்திட்டார். முதலாவதாக, மருத்துவத் துறையில் ‘ஆஷா’ பணியாளர்களாக பணிபுரிபவர்களின் ஊதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து மாதம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தும் உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். அதன் பின்னர், அனந்தபூர்-அமராவதி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் கோப்பில் அவர் கையெழுத்திட்டார்.

அடுத்தபடியாக, ஊடக நிருபர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கான காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கும் கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார்.

கண்ணீர்விட்ட அமைச்சர்...

பதவியேற்பு விழாவில் அமைச்சர் ஒருவர் கண்ணீர் ததும்ப பதவியேற்றுக் கொண்டது அனைவரையும் நெகிழச் செய்தது.

சித்தூர் மாவட்டம் புங்கனூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் பெத்தரெட்டி ராமச்சந்திரா ரெட்டி. இவர், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் வனத்துறை அமைச்சராக பணியாற்றியவர் ஆவார். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, ஜெகன்மோகனிடம் நெருக்கமாக இருந்து வந்த அவர், தொடர்ந்து 3-வது முறையாக புங்கனூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு பஞ்சாயத்து துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சராக பதவியேற்கும்போது உணர்ச்சி மிகுதியால் அவர் கண்ணீர்விட்டு அழுதார். பதவியற்புக்கு பிறகு, முதல்வர் ஜெகனுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x