Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM

திருப்பதி மலைப் பாதையில் இரவில் பைக்குகளுக்கு தடை: தேவஸ்தானத்துக்கு வனத்துறை பரிந்துரை

திருமலையில் மாநில வனத்துறை, திருப்பதி புறநகர் மாவட்ட காவல்துறை, தேவஸ்தான வனத்துறை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத் ஜெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பதி மலைப்பாதையில் 2 பெண்கள் சிறுத்தையால் தாக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநில வனத்துறை சார்பில் தேவஸ்தான அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் அதிகாரிகள் கூறியிருப்பதாவது: திருப்பதி மலைபாதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புலி, சிங்கம் தவிர மற்ற அனைத்து வகை வனவிலங்குகளும் உள்ளன. குறிப்பாக 27 முதல் 35 சிறுத்தைகளும், 35-க்கும் மேற்பட்ட யானைகளும் உள்ளன.

வனவிலங்குகள் உணவு, குடிநீர் மற்றும் இனவிருத்திக்காக அவ்வப்போது மலைப்பாதையை கடப்பது உண்டு. விலங்குகள் மலைப்பாதையை கடந்து செல்வதை வேலி போட்டு தடுக்க முடியாது. எனவே திருப்பதியில் இருந்து திருமலைக்கு மோட்டார் பைக்குகள் செல்ல இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தடை விதிக்க வேண்டும். மேலும் அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் யாத்திரை செல்வதற்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதனை தேவஸ்தானம் பரிசீலிப்பதாக கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x