Published : 15 Jun 2019 04:25 PM
Last Updated : 15 Jun 2019 04:25 PM
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் தொடங்கியது.
நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி, உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.
தி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே கடிதம் எழுதி இருந்தார். மாநில அரசு களுக்கு ஒதுக்கீடு அளிக்க உதவி செய்யும் எந்த அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார்.
மம்தா பானர்ஜியை தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் கலந்து கொள்ளவில்லை. அதுபோலவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உடல்நிலை பாதிப்பால் இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் சற்று முன் தொடங்கியது. மோடி அரசு பதவியேற்ற பின்னர் நடைபெறவுள்ள முதலாவது நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இது.
இந்தக் கூட்டத்தில், வறட்சி நிலை, விவசாயிகள் பிரச்சினை, எல்லையில் நிலவி வரும் பாதுகாப்பு பிரச்சினை, நக்சல் பாதிப்பு மாவட்டங்களில் நிலவி வரும் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்ட் நடவடிக்கை மற்றும் அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, மழை நீர் சேகரிப்புத் திட்டம், மாவட்டங்களை மேம்படுத்தும் திட்டங்கள், விவசாயத் துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT