Published : 10 Jun 2019 12:52 PM
Last Updated : 10 Jun 2019 12:52 PM
மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தில் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து அந்த கட்சி சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.
தேர்தலில் இருந்தே இருகட்சி தொண்டர்களிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறன. 24 பர்கானா மாவட்டம் கந்தேஷ்காளி என்ற இடத்தில் பாஜக கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் பாஜக தொண்டர்கள் 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்தார். மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.
தங்கள் கட்சித் தொண்டர்கள் 3 பேரை பாஜகவினர் கத்தியால் குத்திக் கொன்றதாக மாநில அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மேற்குவங்க அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பட்டது. அதில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள மேற்குவங்க அரசு, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது.
24 பர்கானா மாவட்டத்தில் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து அந்த கட்சி சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கந்தேஷ்காளி பஸிர்கட் உள்ளிட்ட இடங்களில் பாஜக தொண்டர்களின் மறியல் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ரயில்களும் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 24 பர்கானா மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் பிறபகுதிகளிலும் பாஜக தொண்டர்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT