Last Updated : 03 Jun, 2019 01:04 PM

 

Published : 03 Jun 2019 01:04 PM
Last Updated : 03 Jun 2019 01:04 PM

மக்கள்தொகை பெருக்கம் தடுப்புச் சட்டத்தை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்: அமைச்சர் கிரிராஜ் சிங் யோசனை

மக்கள் தொகை பெருக்கம் தடுப்புச் சட்டத்தை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பெருகிவரும் மக்கள் தொகை இந்தியாவின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் நல்லிணக்கத்துக்கும் மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.

மக்கள் தொகை பெருக்கம் தடுப்பு சட்டத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்து இல்லந்தோறும் கொண்டு சேர்க்க வேண்டும்.

சாலை முதல் நாடாளுமன்றம் வரை இந்த இயக்கத்தை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். காலமும், வளமும் குறைவாகவே இருக்கின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, யோகாகுரு பாபா ராம்தேவ்,  மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த மூன்றாவது பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்று யோசனை சொல்லியிருந்தார். அந்தக் கருத்தை கிரிராஜ் சிங்கும் ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்தேவ் தனது அறிக்கையில், "இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில் 150 கோடியைத் தாண்டாமல் இருக்க வேண்டும். அதற்கும் அதிகமாக மக்கள் தொகை மிகுந்தால் அதனை சமாளிக்கக் கூடிய திறனும் வளமும் நம்மிடம் இல்லை. இது சாத்தியமாக வேண்டுமானால் அரசாங்கமே இது தொடர்பாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும். மூன்றாவது பிறக்கும் குழந்தை தேர்தலில் போட்டியிடவும் இயலாது வாக்களிக்கவும் இயலாது என்று சட்டம் இயற்ற வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

ஐ.நா. சபையின் கணிப்பின்படி 2017-ல் இந்திய ஜனத்தொகை 1.3 பில்லியன் அளவில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2024-ல் இந்திய மக்கள் தொகை சீனாவை விஞ்சும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x