Published : 06 Sep 2014 03:42 PM
Last Updated : 06 Sep 2014 03:42 PM
"டெல்லியில் குதிரை பேரம் மூலம் ஆட்சி அமைக்க பாஜக முயல்கிறது. எனவே, இப்பிரச்சினையில் குடியரசுத் தலைவர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்" என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுக்கலாம் என துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் கேஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய கேஜ்ரிவால்: டெல்லியில் பாஜக எப்படி ஆட்சி அமைக்க முடியும். குதிரை பேரம் மூலம் ஒரு எம்.எல்.ஏ-க்கு ரூ.20 கோடி வரை பணம் அளித்து தங்கள் கட்சியின் பலத்தை அதிகரித்துக் கொண்டால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்.
இத்தகைய நிலையில், துணை நிலை ஆளுநர் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருப்பது நியாயமற்றது, வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது. அப்படியே ஆட்சி அமைத்தாலும் அவர்கள் எப்படி பெரும்பான்மையை நிரூபிப்பார்கள். இந்த திட்டமிட்ட சதியை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தவுள்ளோம் என்றார்.
டெல்லி சட்டசபையில் ஜன்லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பதவியை அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT