

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி தலைமையிலான பாஜக ஆட்சியில் தொழில் புரட்சி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உ.பி.யில் கடந்த 70 ஆண்டுகளில் (1947 முதல் மார்ச் 2017 வரை), 14,178 தொழிற்சாலைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் முதல்வராக யோகி பதவியேற்ற 2017 ஏப்ரல் முதல் மாநிலத்தில் 17,841 புதிய தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யோகி அரசின் இந்த சாதனை மிகவும் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் முதன்மைச் செயலாளரான தமிழர் எம்.கே. சண்முக சுந்தரம் கூறும்போது, "முதல்வர் யோகி அரசு, எளிதான வணிகம் செய்தல், முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குதல், வெளிப்படையான செயல்முறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், ஒற்றைச்சாளர முறை, இணைய வழி அனுமதிகள், நில வங்கிகள், மேம்பட்ட சட்டம்- ஒழுங்கு மற்றும் வலுவான உள்கட்டமைப்பு போன்ற வசதிகளை உருவாக்கியுள்ளது.
இதனால் இந்தியா மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உ.பி. மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். செப்டம்பர் 2023 முதல் தற்போது வரை மட்டும், 10,194 தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் 4,746 புதிய தொழிற்சாலைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2017க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட இந்தத் தொழிற்சாலைகள், தற்போது 16,53,179 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றன. இவர்களில் 15,29,907 பேர் ஆண்கள்; 1,23,272 பேர் பெண்கள் ஆவர்" என்றார்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை யோகி அரசு உறுதி செய்திருப்பதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. உ.பி.யின் விரைவுச் சாலைகள், பாதுகாப்புத் தாழ்வாரங்கள், விமான நிலையங்கள், சரக்கு போக்குவரத்து மையங்கள் போன்ற முக்கிய உள் கட்டமைப்புத் திட்டங்கள் தொழில் துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன. இந்த முயற்சிகளின் விளைவாக, உ.பி. இனி வெறும் விவசாய மாநிலமாக மட்டும் இல்லாமல், தொழில் துறை மாநிலமாகவும் உருவெடுத்து வருவதாக கருதப்படுகிறது.