

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம், கட்டோல் பகுதி, ரவுல்கானில் சுரங்க, தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக எஸ்பிஎல் தொழிற்சாலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இன்று காலை தொழிற்சாலை வளாகத்தில் உள்ள டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் காலை 7 மணி முதல் காலை 7.15 வரை இந்த வெடி விபத்து நடந்துள்ளது. வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. சம்பவம் தொடர்பான முழுத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். காயமடைந்த 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெடி விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (என்டிஆர்எஃப்), மாநில பேரிடர் மீட்புப் படையினரும் (எஸ்டிஆர்எஃப்) மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெடிவிபத்து நடந்த தொழிற்சாலையை மாவட்ட ஆட்சியர் விபின் இடங்கர், போலீஸ் எஸ்.பி.ஹர்ஷ் போடர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.