Published : 24 Mar 2018 07:48 AM
Last Updated : 24 Mar 2018 07:48 AM
தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முடிவை எதிர்க்க வேண்டும் என தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
மாநிங்களுக்கு இடையேயான வரி வசூலிப்பது உள்ளிட்டவற்றை மத்திய நிதி ஆணையம் கவனித்து வருகிறது. இதுவரை 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வது நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்.கே.சிங் தலைமையில் 15-வது மத்திய நிதி ஆணையத்தை அமைத்தது.
இந்தக் குழு நிதிப் பகிர்வில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக, இனி 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப் பகிர்வு செய்யப்படும் எனவும் தங்கள் பரிந்துரைகள் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், 2025-ம் ஆண்டு மார்ச் 31 வரை 5 ஆண்டுகளுக்கு செல்லும் எனவும் அறிவித்தது.
இதற்கு ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசு 15-வது நிதி ஆணையத்தை நிதிப் பகிர்வில் 1971-க்கு பதிலாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்துமாறு கூறியுள்ளது. இது தென் மாநிலங்களின் நலனுக்கு எதிராக அமையும். எனவே நாம் இதற்கு எதிராக போராட வேண்டும்” என தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடிஉள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் தென் மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT