Published : 04 Mar 2018 11:19 AM
Last Updated : 04 Mar 2018 11:19 AM

சத்தீஸ்கர்-தெலங்கானா வனப்பகுதியில் மீண்டும் துப்பாக்கி சண்டை: நக்சல் உடல்களுக்கு பிரேத பரிசோதனை - தெலங்கானா அரசுக்கு நக்சல் இயக்கத் தலைவர் எச்சரிக்கை

சத்தீஸ்கர்-தெலங்கானா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியில் நேற்று மீண்டும் நக்சல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனிடையே பத்ராசலம் மருத்துவமனையில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடலுக்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை நடந்தது.

இந்த என்கவுன்ட்டரால் பாதிப்படைந்துள்ள நக்சல் இயக்கத் தலைவர் ஜெகன் தெலங்கானா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சத்தீஸ்கர் - தெலங்கானா மாநில எல்லையில் உள்ள ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டம், தடவல குட்டா வனப்பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை அங்கு பதுங்கி இருந்த நக்சல்களை இரு மாநில நக்சல் ஒழிப்பு படையினர் சரணடையும்படி எச்சரித்தனர். இதனால், போலீஸ் படையை நோக்கி நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து, போலீஸாரும் நக்சல்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 7 பெண் நக்சல்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாகவும், சுஷில் குமார் எனும் காவலரும் கொல்லப்பட்டதாகவும் தெலங்கானா போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், ஹெலிகாப்டர் மூலம் 10 பேரின் சடலங்கள் நேற்று அதிகாலை பத்ராசலத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வாராங்கலில் இருந்து வந்த கைரேகை நிபுணர் குழுவினர், மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினர் முன்னிலையில், பிரேதப் பரிசோதனை, வீடியோ பதிவுடன் நடத்தப்பட்டது.

இதனிடையே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் முக்கிய நக்சல்கள் தப்பித்து விட்டதாகவும், அவர்கள் அதே பகுதிகளில் மறைந்திருப்பதாகவும் வந்த தகவல்களின்படி, நேற்று அதிகாலை முதல், பத்ராசலம் ஏஜென்சி பகுதியில் உள்ள சர்லா-வெங்கடாபுரம் வனப்பகுதிகளில் தெலங்கானா-சத்தீஸ்கர் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மீண்டும் நக்சல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக போலீஸ் துறையினர் தெரிவித்தனர். ஆனால் இதில் யாரும் என்கவுன்ட்டர் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நக்சல்கள் மீது போலீஸார் போலி என்கவுன்ட்டர் நடத்தியுள்ளதாக தெலங்கானா நக்சல் இயக்க அதிகார பிரதிநிதி ஜெகன் ஓர் ஆடியோ கேசட் மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த ஆடியோ கேசட்டில் ஜெகன் கூறியிருப்பதாவது: சத்தீஸ்கர்-தெலங்கானா வனப்பகுதியில் நக்சல்கள் உடல் நலம் சரியில்லாமல் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் வேளையில், இரு மாநில போலீஸார் வேண்டுமென்றே இவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டுக்கொன்றுள்ளனர். முக்கிய நக்சல் இயக்க தலைவர்களான ஹரிபூஷன், ராஜா ரெட்டி, தாமோதர் போன்றோர் பாதுகாப்பாக உள்ளனர்.

ரகசிய உளவாளிகள் கொடுத்த தகவலின்பேரில்தான் இந்த என்கவுன்ட்டரை போலீஸார் நடத்தியுள்ளனர். தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவின் பாராட்டுதல்களை எதிர்பார்த்து இந்த என்கவுன்ட்டர் நடந்துள்ளது. இதற்காக தெலங்கானா அரசுக்கும், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில போலீஸாருக்கும் தக்க சமயத்தில் பதிலடி கொடுப்போம். இவ்வாறு ஜெகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x