Published : 23 Mar 2018 12:52 PM
Last Updated : 23 Mar 2018 12:52 PM
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு (வயது71) திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிம்லாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிம்லா அருகே சராபரா பகுதியில் பிரியாங்கா காந்தி வத்ரா ஒரு சொகுசு பங்களா கட்டி வருகிறார். இந்த வீட்டின் பணிகளைப் பார்வையிடுவதற்காக நேற்று சோனியா காந்தி சிம்லா சென்று இருந்தார். அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தி வத்ராவும் தங்கினார்கள்.
அப்போது, சோனியா காந்திக்கு நள்ளிரவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக கார் மூலம் சண்டிகர் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் சோனியா காந்தியின் உடல்நிலையை பரிசோதனை செய்துவிட்டு, அவரை உடனடியாக டெல்லிக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து, அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ரமேஷ் சந்த் உடனடியாக சோனியா காந்தியுடன் அனுப்பிவைக்கப்பட்டார்.
சண்டிகரில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று அதிகாலை 2.35 மணிக்கு சோனியா காந்தி அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் சந்த் கூறுகையில், ‘ சோனியா காந்திக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு அதிகாலை 2.35 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பட்டபின் உடல்நிலை சீரானது. மருத்துவமனைக்கு வந்து சிறிதுநேரம் சிகிச்சை பெற்று அவரின் உடல்நிலை இயல்புநிலைக்கு வந்தபின் சிறப்பு விமானம் மூலம டெல்லி சென்றார்.
சிம்லாவில் தொடர்ந்து மழையும், பனியும் இருந்து வருவதால், சோனயா காந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT