Last Updated : 01 Mar, 2018 08:06 AM

 

Published : 01 Mar 2018 08:06 AM
Last Updated : 01 Mar 2018 08:06 AM

சசிகலாவிடம் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்ற புகார்: ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு- 3 மாதத்தில் அறிக்கை தாக்கல்

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை வழங்குவதற்காக அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்பு படைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படார். சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றதாக அப்போதைய டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதை மறுத்த சத்திய நாராயணராவ், ரூபாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

சிறைத்துறை முறைகேடு குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார், “சிறையில் சில முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை தான். ஆனால் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தெரியவில்லை. இதனை ஊழல் தடுப்பு படை விசாரிக்க வேண்டும்” என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, “சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்பு படைக்கு உத்தரவிடுங்கள். இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு படை 3 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். இதனால் உள்துறை அமைச்சகம், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ஊழல் தடுப்பு படைக்கு சசிகலா விவகாரத்தை விசாரிக்க உத்தரவிட்டது.

எனவே இன்னும் ஓரிரு தினங்களில் ஊழல் தடுப்பு படை சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x