Published : 28 Mar 2018 08:33 AM
Last Updated : 28 Mar 2018 08:33 AM
உ.பி.யில் இனிவரும் இடைத்தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு அளிப்பதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முடிவு செய்துள்ளார்.
உ.பி.யில் கோரக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்பூர் பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், “கோரக்பூர், பூல்பூர் தொகுதி இடைத்தேர்தலில் தொண்டர்களை ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டது இனி வரும் காலத்தில் எந்தவொரு இடைத்தேர்தலிலும் அவ்வாறு நடந்துகொள்ள மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
உ.பி.யில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளித்தபோதிலும் பகுஜன் சமாஜ் தோல்வி அடைந்தது.
இதுகுறித்து மாயாவதி கூறும்போது, “பகுஜன் சமாஜ் வெற்றிக்கு சுயேச்சை எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப்பை சார்ந்திருக்குமாறு செய்து தனது அரசியல் முதிர்ச்சியின்மையை அகிலேஷ் வெளிப்படுத்திவிட்டார். அகிலேஷ் இடத்தில் நான் இருந்திருந்தால் பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு முன்னுரிமை அளித்திருப்பேன்” என்றார்.
என்றாலும் இத்தேர்தல் முடிவு சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் இடையிலான நெருக்கத்தை பாதிக்காது என்றும் மாயாவதி கூறினார். இந்நிலையில் அதற்கு மாறான முடிவை மாயாவதி எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT