

"அம்மா ஜெயிலில் இருக்கும்போது அக்காவுக்கு பெயிலா?" என்று மேற்கு வங்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் மம்தா பானர்ஜி உட்பட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் பெயர் அடிபடுவதால், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அதே கதியைத்தான் மமதா பானர்ஜியும் சந்திக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறிவருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதையடுத்து ‘அம்மாவுக்கு ஜெயில், அக்காவுக்கு பெயிலா?’ என்ற புதிய வாசகத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய பிரச்சார உத்தியில் களமிறங்கியுள்ளது.
சூரிய காந்த மிஸ்ரா என்ற மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சனியன்று கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது, "தெற்கில் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்க முடிகிறது என்றால், ஏன், மம்தா பானர்ஜியை விசாரிக்கக் கூடாது?” என்று பேசியுள்ளார்.
"ஊழல் வழக்கில் முதன்முறையாக முதல்வர் ஒருவர் சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன முறைகேடு என்பது சிலபல ஆயிரம் கோடி ரூபாய் ஊழலாகும். இது மிகப்பெரிய ஊழல், இதனை சிபிஐ விசாரித்து வருகிறது. மம்தா பானர்ஜியின் கதி என்னவாகும்?” என்று மிஸ்ரா அதே கூட்டத்தில் பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறும்போது, “மம்தா பானர்ஜிக்கும் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட கதி ஏற்படும்” என்று கூறியுள்ளார்
சாரதா நிதி நிறுவன ஊழல்:
மேற்கு வங்கத்தில் அன்னை சாரதா தேவியின் பெயரில் நிதி நிறுவனத்தை சுதீப்த சென் 2006-ல் தொடங்கினார். முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று மக்களிடம் கூறி, கிட்டத்தட்ட ரூ. 6,000 கோடியைத் திரட்டியது அந்நிறுவனம்.
சுற்றுலாப் போக்குவரத்து, ஹோட்டல் தொழில், திரைப்படத் துறையில் முதலீடு, தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், ரியல் எஸ்டேட் வியாபாரம், மோட்டார் சைக்கிள் உற்பத்தி, அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு என்று சாரதா பிரம்மாண்டம் காட்டியது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான சதாப்தி ராய், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, குனால் கோஷ் போன்றோர் அதன் 'பிராண்ட் அம்பாசடர்'களாகச் செயல்பட்டார்கள். இவையெல்லாம் மக்களை இந்த நிறுவனத்தின்பால் மேலும்மேலும் ஈர்த்தன.
இந்திய முதலீட்டுச் சட்டப்படி, 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து முதலீடு திரட்ட 'செபி' அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். 2009-ல் ‘செபி’ நோட்டீஸ் அனுப்பியதும், புதிதாக 200 நிறுவனங்களை உருவாக்கி, முதலீட்டாளர்களை அவற்றில் பிரித்துப் பதிவு செய்து, ‘செபி’யின் முயற்சியை முறியடித்தது அந்நிறுவனம். முதலீட்டாளர்களுக்கு வட்டியும் அசலும் தரப்படவில்லை. ஒருநாள் விஷயம் வெடித்து முறைகேடு வெளியே வந்தது.
சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டபோது, மேற்கு வங்கக் காவல் துறை விசாரித்தால் போதும் என்ற முதல்வர் மம்தா பானர்ஜி, நீதிபதி சியாமள சென் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தார். ஊழலை வெளிக்கொணர்வதைவிட, மறைக்கவே மாநில அரசு முயல்கிறது என்று முதலீட்டாளர்கள் சந்தேகப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் உதவி நாடப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது.
சாரதாவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டியுள்ளனர். அவர்களில் 83% பேர் ரூ.10,000-க்கும் குறைவாகச் செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.