Published : 09 Mar 2018 02:50 PM
Last Updated : 09 Mar 2018 02:50 PM
சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ உலக சமய மாநாட்டுச் சொற்பொழிவை பாடத்திட்டத்தில் சேர்க்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
சிகாகோ உலக சமய மாநாட்டுச் சொற்பொழிவின் 125-வது ஆண்டுக் கொண்டாட்டம் தொடர்பான கூட்டம் நேற்று கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை வகித்தார். மாநிலத்தின் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தரின் 1893 ஆம் ஆண்டில் சிகாகோ உலக சமய மாநாட்டு சொற்பொழிவின் 125-வது ஆண்டுக் கொண்டாட்டத்தைக் கவனிப்பதற்காக ஒரு குழு இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
ராமகிருஷ்ணா மிஷனின் பிரதிநிதிகளைக் கொண்ட இக்குழு விவேகனாந்தாவின் பேச்சை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தது. அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்னிலை வகித்த கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, ''சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு, வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிலிருந்து 12 வரையுள்ள வகுப்புகளில் புதிய பாடமாக இடம்பெறும், வகுப்பு வாரியாக எவ்வாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை பாடத் திட்டக் குழு இறுதி செய்யும்'' என்று தெரிவித்தார்.
சிகாகோ உலக சமய மாநாட்டில் பேசிய புகழ்பெற்ற பேச்சின் 125-வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளில் மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்த்தெடுக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கென தனியாக 10 கோடி ரூபாயை மாநில அரசு வழங்க ஒப்புதல் அளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT