Published : 29 Mar 2018 11:00 AM
Last Updated : 29 Mar 2018 11:00 AM
மேற்கு வங்காளத்தில் ராமநவமி விழாவில் மோதல் நடந்த பகுதிக்கு செல்ல அம்மாநில ஆளுநர் திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என அம்மாநில அரசு கைவிரித்துள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா ராஜ்பவன் வெளியிட்டு அறிக்கை:
ஆளுநர் திரிபாதிக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கு மாநில அரசு தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது.
ராணிகஞ்ச் ராமநவமி திருவிழாவில் ஏற்பட்ட கலவரத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த அசான்சோல்-துர்க்காபூர் துணை காவல் ஆணையர் அரிந்தம் தத்தா சவுத்ரியைப் பார்க்க விரும்புகிறார். திருவிழாவின்போது தன் கடமையை ஆற்றச் சென்ற போலீஸ் அதிகாரி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நலத்தை நேரில் கண்டு சிகிச்சையின் தற்போதைய நிலவரத்தை அறிய ஆளுநர் விருமபுகிறார். இந்த குண்டுவெடிப்பில் துணை காவல் ஆணையர் ஒரு கையை இழந்துள்ளார்.
கலவரத்தின் சூழ்நிலை கருதி ராணிகஞ்ச் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் அங்கு கவர்னர் வருவதாக இருந்தால் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க இயலாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
ராணிகஞ்ச் மற்றும் அசான்சோலை உள்ளடக்கிய பகுதிகள் வன்முறை கடுமையாக பாதித்துள்ளன என்பதால் அவற்றின் அருகிலுள்ள துர்காபூருக்கு கவர்னர் வருகை தருவது உகந்தது இல்லை. எனவே அங்கு செல்ல வேண்டாம் என்று மாநில அரச நேற்று (புதன்கிழமை) அறிவுரை வழங்கியுள்ளது.
இவ்வாறு கவர்னரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் அன்று ராணிகஞ்சில் ராம நவமி கொண்டாடப்பட்டபோது இரு குழுக்களிடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு நபர் கொல்லப்பட்டதாகவும் மருத்துவமனையில் போலீஸ் அதிகாரி கவலைக்கிடமான நிலையில் உள்ளாதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT