Published : 13 Mar 2018 09:34 AM
Last Updated : 13 Mar 2018 09:34 AM
இந்தியாவில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் செல்பவர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வகை செய்யும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய நிதித் துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018-ஐ மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் நோக்கம் குறித்த அறிக்கையில், “வங்கிகளில் பெற்ற கடனை முறையாக திருப்பிச் செலுத்தாதது உட்பட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட சிலர் நாட்டை விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இதனால் அவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பது என்பது இந்திய நீதிமன்றங்களுக்கு சிக்கலானதாக உள்ளது. இதனால் நீதித் துறையின் நேரம் வீணாவதுடன் நம் நாட்டின் சட்டத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க இப்போது உள்ள சட்டங்களில் வழி இல்லை.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவும் பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடு தப்பிச் செல்வதன் மூலம் சட்டத்தின் பிடியிலிருந்து விலகியிருப்பதைத் தடுக்கவும் புதிதாக ஒரு சட்டம் இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018 தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி, ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமாக கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றவர்கள் அல்லது வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக நாடு திரும்ப மறுப்பவர்கள் தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் என வரையறுக்கப்படுவர். இவர்கள் நாடு திரும்பி வழக்கை எதிர்கொள்ளவும் அவர்களுடைய அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது ஆகும்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT