Published : 21 Mar 2018 08:29 AM
Last Updated : 21 Mar 2018 08:29 AM

சரத் பவாரின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் மம்தா பானர்ஜி

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் அழைப்பை ஏற்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி அடுத்த வாரம் டெல்லி செல்லவுள்ளார்.

தேசிய அளவில் 3-வது அணியை அமைக்க மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை அமைக்க அவர் முயன்று வருகிறார். இதற்காக தெலுங்கு தேசம், டிஆர்எஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த வாரம் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அந்தக் கூட்டத்துக்கு வருமாறு மம்தா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அழைப்பை ஏற்று அடுத்த வாரம் டெல்லிக்கு மம்தா செல்லவுள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி பயணத்தின்போது எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் மம்தா சந்தித்துப் பேசுகிறார்.

மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோரையும் சந்தித்துப் பேச மம்தா முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக சோனியாவை சந்தித்துப் பேச மம்தா பானர்ஜி நேரம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கான முயற்சிகளில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மோடி தலைமையிலான மத்திய அரசை ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் மம்தா பானர்ஜி, 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று அண்மையில் பேசியது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x