Published : 13 Mar 2018 09:33 AM
Last Updated : 13 Mar 2018 09:33 AM

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி:தொடர்ந்து 6-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 6-வது நாளாக நேற்றும் முடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் பகுதி கடந்த 5-ம் தேதி தொடங்கியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காதது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவது, வங்கிக் கடன் மோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி டிடிபி, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கின.

இந்த வார தொடக்க நாளான நேற்று காலை மக்களவை கூடியதும், டிஆர்எஸ், டிடிபி, அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவையை ஒத்தி வைத்தார் அதன் தலைவர் சுமித்ரா மகாஜன். பின்னர் அவை கூடியபோதும் அதே நிலை நீடித்தது. அமளிக்கு நடுவே நிதித்துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா 2 மசோதாக்களை அறிமுகம் செய்தார். ஆனால் அவையில் தொடர்ந்து அமளி நிலவியதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் டிடிபி, அதிமுக, திரிணமூல், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றம் 6-வது நாளாக நேற்றும் முடங்கியது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x