Published : 09 Mar 2018 09:03 AM
Last Updated : 09 Mar 2018 09:03 AM
நாகாலாந்து மாநிலத்தின் முதல்வராக தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) தலைவர் நெபியு ரியோ (67) நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
மொத்தம் 60 உறுப்பினர்களை நாகாலாந்து சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்) 27 தொகுதிகளைக் கைப்பற்றியது. என்டிபிபி - பாஜக கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி கண்டது. இதில், என்டிபிபி 18 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எனினும், எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு எம்எல்ஏ மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவுடன் என்டிபிபி கட்சித் தலைவர் நெபியு ரியோ ஆட்சியமைக்க கடந்த 4-ம் தேதி உரிமை கோரினார். ஆனால், மத்தியில் பாஜகவுடன் தாங்கள் கூட்டணியில் இருப்பதை சுட்டிக்காட்டிய ஆளும் என்பிஎப் கட்சி, ஆட்சியிலிருந்து விலக மறுத்தது. இதனால் அங்கு புதிய ஆட்சி அமைவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தக் குழப்பத்துக்கு முடிவுகட்டும் வகையில், என்பிஎப் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக பாஜக நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும், என்டிபிபி கட்சித் தலைவர் நெபியு ரியோ ஆட்சியமைப்பதற்கு, தங்களின் 12 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் பாஜக வழங்கியது. அதன் பின்னர், நெபியு ரியோவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் பி.பி. ஆச்சார்யா முறைப்படி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், மாநிலத் தலைநகர் கொஹிமாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகாலாந்து முதல்வராக நெபியு ரியோ பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் பி.பி. ஆச்சார்யா, பதவிப் பிராமணம் செய்து வைத்தார். பாஜக மூத்த தலைவர் யாந்துன்கோ பட்டான், துணை முதல்வராக பொறுப்பேற்றார். நாகாலாந்தில் நெபியு ரியோ முதல்வராக பொறுப்பேற்பது இது 4-வது முறையாகும். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். - ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT