Last Updated : 19 Mar, 2018 04:50 PM

 

Published : 19 Mar 2018 04:50 PM
Last Updated : 19 Mar 2018 04:50 PM

அவதூறு வழக்கு: நிதின் கட்காரியிடம் மன்னிப்பு கேட்டார் முதல்வர் கேஜ்ரிவால்

மத்திய கப்பல்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு எதிராக தான் பேசி வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவித்து இன்று நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்.

டெல்லி நீதிமன்றத்தில் நிதின் கட்காரி சார்பில் அவதாறு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதை முடிக்கும் நோக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நிதின் கட்காரி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், நாட்டின் மிகப்பெரிய ஊழல்வாதி நிதின் கட்காரி என்று பேசி இருந்தார். இதற்கு நிதின் கட்காரி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, கேஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆஜராகாததைத் தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு நீதிமன்றம் கேஜ்ராவாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகி கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்டதையடுத்து, அதை நீதிமன்றம் உத்தரவை திரும்பப் பெற்றது.

இந்த வழக்கு டெல்லி கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், மாஜிஸ்திரேட் சமர் விஷால் முன்னிலையில், முதல்வர் கேஜ்ரிவால்தரப்பிலும், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தரப்பிலும் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இருவரும் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும், ஒரே பொதுவாழ்க்கையில் தான் இருந்து வருகிறோம். நான் பேசிய சில வார்த்தைகள் நிதின் கட்காரியை புண்படுத்தும் வகையில் இருந்ததால், அவர் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், எனக்கு அவர் மீது எந்தவிதமான விரோதமும இல்லை. நான் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டு வருந்துகிறேன் என அரவிந்த் கேஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அவதூறு வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக நிதின்கட்காரி தரப்பிலும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அவதாறு வழக்கு தொடர்ந்த நிலையில், அவரிடமும் அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்.

சமீபத்தில் சிரோண்மனி அகாலிதளம் தலைவர் பிக்ராம் சிங் மஜிதா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதைத் திரும்பப் பெறும் நோக்கில், அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x