Published : 06 Mar 2018 04:56 PM
Last Updated : 06 Mar 2018 04:56 PM
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவின் உடன்படிக்கையால் ஒரே இரவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சாதகமாக இருந்த உ.பி.யின் இரு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி, பாஜகவிற்கு சவாலாகி விட்டது.
பாஜக ஆளும் உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் காலி செய்யப்பட்டது கோரக்பூர் தொகுதி. இதேபோல், துணை முதல்வரான கேசவ் பிரசாத் மவுரியாவால் பூல்பூர் காலியானது. இவ்விரு மக்களவை தொகுதிகளுக்கும் வரும் மார்ச் 11-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப்போட்டி நிலவியது. மாயாவதி இதில் போட்டியிடப்போவதில்லை என விலகிக் கொண்டாலும் அங்கு பாஜகவின் வெற்றி எளிதாகும் நிலை இருந்தது.
மார்ச் 23-ல் நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலின் ஒரு உறுப்பினர் பதவி பெற மாயாவதி கட்சியினர் அகிலேஷுடன் நேற்று முன்தினம் உடன்படிக்கை செய்யப்பட்டது. இதை அடுத்து மக்களவையின் இருதொகுதி பிரச்சாரத்திலும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜினருக்கு இடையே ஒரே இரவில் ஒற்றுமை மலர்ந்துள்ளது. இதனால், அங்கு பாஜகவின் எளிதான வெற்றி, பெரும் சவாலாக மாறி விட்டது.
சமாஜ்வாதிக்கு அஜீத் சிங் ஆதரவு
பூல்பூரில் சுயேச்சையாக அத்தீக் அகமது என்பவர் போட்டியிடுகிறார். கிரிமினல் அரசியல்வாதியாகக் கருதப்படும் அத்தீக், சில மாதங்கள் வரை சமாஜ்வாதியில் இருந்தவர். இவருக்கு முஸ்லிம்கள் உட்பட சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு வாக்குகள் விழுந்து விடும் வாய்ப்புகள் உள்ளன. இதேபோல், காங்கிரஸும் சமாஜ்வாதியின் வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், உ.பி.யில் ஜாட் சமூகத்தின் அரசியல் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் அஜீத்சிங், சமாஜ்வாதிக்கு தம் ஆதரவை இன்று அறிவித்துள்ளார். இது அகிலேஷின் வேட்பாளர்களுக்கு சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது.
கோரக்பூர் வேட்பாளர்கள்
கோரக்பூரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றவர் யோகி ஆதித்யநாத். இங்கு அவர் உபேந்திரா சுக்லா எனும் பிராமணரை போட்டியிட வைத்துள்ளார். சமாஜ்வாதி சார்பில் மீனவ சமூகத்தின் பிரவீன் குமார் நிஷாத் என்பவரை நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் சுர்ஹித்தா சட்டர்ஜி கரீம் என்பவர் போட்டியிடுகிறார். 2017-ல் நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டும் பாஜகவை தோற்கடிக்க முடியவில்லை.
பூல்பூர் வேட்பாளர்கள்
அலகாபாத்தின் அருகிலுள்ள பூல்பூரில் பாஜக சார்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கவுசலேந்திர பட்டேல், இதே வகுப்பின் நாகேந்திரசிங் பட்டேல் சமாஜ்வாதிக்காகவும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸுக்காக மணிஷ் மிஸ்ரா எனும் பிராமணர் போட்டியில் உள்ளார். இவர்களுடன் சுயேச்சையாக அத்தீக் அகமதுவும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முடிவுகள் மார்ச் 14-ல் வெளியாக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT