Published : 02 Mar 2018 08:51 AM
Last Updated : 02 Mar 2018 08:51 AM

தலைமைச் செயலர் தாக்கப்பட்ட வழக்கு: டெல்லி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி அரசின் தலைமைச் செயலர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக மாநில காவல் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள் ளது.

டெல்லி அரசின் தலைமைச் செயலராக பணிபுரிபவர் அன்ஷு பிரகாஷ். இவர் முதல்வர் அர்விந்த் கேஜரிவால் பிப்ரவரி 19-ம் தேதி ஆதார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பிரகாஷ் ஜர்வால், அமானத்துல்லா கான் ஆகியோர் அன்ஷு பிரகாஷைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக டெல்லி போலீஸில் அன்ஷு பிரகாஷ் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து பிரகாஷ் ஜர்வால், அமானத்துல்லா கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்குமாறு கடந்த வாரம் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பிரகாஷ் ஜர்வால் உள்ளிட்டோர் மனு தாக் கல் செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதையடுத்து அவர்கள் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டெல்லி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மார்ச் 7-ம் தேதிக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அன்ஷு பிரகாஷைத் தாக்கிய வழக்கில் பிரகாஷ் ஜர்வால், அமானத்துல்லா கான் ஆகியோர் தற்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் உள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x