Last Updated : 22 Mar, 2018 04:17 PM

 

Published : 22 Mar 2018 04:17 PM
Last Updated : 22 Mar 2018 04:17 PM

வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவை அரசே ஏற்கும்: மத்திய அரசு அறிவிப்பு

 

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசு ஏற்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இதற்கு முன் போரில், அல்லது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவாக ரூ.10 ஆயிரம் மத்திய அரசு அளித்து வந்தது. இந்நிலையில், அந்தக் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்பதாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவில் டியூஷன் கட்டணம், விடுதிக் கட்டணம் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

போரில் அல்லது தீவிரவாதிகளின் தாக்குதல், எதிரிநாட்டுப் படையின் மூலம் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரரக்ளின் குழந்தைகள் கல்விச் செலவுக்கு அரசு வழங்கும் தொகைக்கு கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.

அதாவது அந்தக் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும். குறிப்பாக அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், ராணுவப் பள்ளிகள், சைனிக் பள்ளிகள், மத்திய, மாநில அரசுப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சுயாட்சிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் படிக்கும் வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவை அரசு ஏற்கும். இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஒப்புதல் அளித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத் துறையின் இணைஅமைச்சர் சுபாஷ் பாம்ப்ரே கூறுகையில் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 679 குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்றுள்ளது. இதற்காக ரூ.3 கோடி செலவு செய்துள்ளது. ஒரு மாணவர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.18.95 லட்சம் ஆண்டுக்கு செலவாகிறது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x