Published : 09 Sep 2014 12:29 PM
Last Updated : 09 Sep 2014 12:29 PM

சிபிஐ இயக்குநருக்கு எதிரான வழக்கு 10 நாட்களில் பதிலளிக்க உத்தரவு

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.

அப்போது, ‘‘நிலக்கரி ஊழலில் தொடர்புடையவர்களை சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா 50-க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளார்.

எனவே, 2ஜி மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு வழக்கு விவகாரங்களில் அவர் பங்கேற்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

மேலும், குற்றம் சாட்டப் பட்டவர்களை சந்தித்ததற்காக அவர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘நிலக்கரி ஊழல் தொடர்பாக 20 எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப் பட்டுள்ளன. இரண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

இந்நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ரஞ்சித் சின்ஹா சந்தித்துள்ளார். அவர் 2ஜி அலைக்கற்றை ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணைகளை சீர்குலைக்க முயல்கிறார். அவர் அப்பதவியில் தொடர்ந்து நீடிக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அமரேந்திர சரண், விகாஷ் சிங் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, ‘உச்சநீதிமன்றம் கண்காணித்து வரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ரஞ்சித் சின்ஹா சந்தித்துள்ளதால், அவர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது?’ என்ற கேள்விக்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர்.

வழக்கின் அடுத்த விசாரணை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x