Last Updated : 14 Mar, 2018 03:37 PM

 

Published : 14 Mar 2018 03:37 PM
Last Updated : 14 Mar 2018 03:37 PM

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இடத்தை பரிசாக அளிக்க வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, சர்ச்சைக்குரிய இடத்தை முஸ்லிம்கள் பரிசாக அளிக்க வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தியில் உள்ள இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இருக்கும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் பேசும் நடவடிக்கையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இதுவரை இருதரப்பைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தலைவர்களுடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமரசப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கில் எந்த மதத்தினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் அது மிகப் பெரிய கொந்தளிப்பில்தான் முடியும். இதை இரு சமூக மக்களும் அமைதியான முறையில், விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.

ராமர் பிறந்த இடமான அயோத்தியோடு இந்துக்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால், இந்த இடத்தோடு முஸ்லிம்களுக்கு உணர்வுரீதியாக எந்தவிதமான பிணைப்பும் இல்லை. பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் தொழுகை நடத்துவதும் அவர்களைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளப்படாது.

இந்த சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக, முஸ்லிம் சமூத்தினர் இந்துக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும். இரு மதத்தினரும் ஒற்றுமையாக இருந்து, ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்து இந்தப் பிரச்சினைக்கு சமூகத் தீர்வு காண வேண்டும்.

இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்தில் மூலம் தீர்ப்பது என்பது கடினமாகும். இதை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொள்வதில்தான் இரு சமூகத்தினரும் விரும்புகிறார்கள்.

ஏற்கெனவே குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோயில் இருந்து வருகிறது. இதை அங்கிருந்து அகற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆதலால், இரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் அமர்ந்து பேசி இடப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள இந்துக்கள், முஸ்லிம் மக்களை பிரித்தாளும் விஷயமாக இந்த ராமர் கோயில், பாபர் மசூதி இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டால், இரு தரப்பு மக்களுக்கு இடையே பிரச்சினை இருக்காது,

இவ்வாறு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x