Published : 19 Mar 2018 03:24 PM
Last Updated : 19 Mar 2018 03:24 PM

கால்நடைத் தீவன 4வது ஊழல் வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி: ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பு

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கிலும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லாலுவுக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து லாலு கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ராஞ்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

கால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேலும் 2 வழக்குகளில் லாலு தண்டிக்கப்பட்டுள்ளார். சைபாசா கருவூலத்தில் நடந்த ரூ.37.7 கோடி கையாடல் வழக்கில் லாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கில் லாலு ஜாமீன் பெற்றுள்ளார். சைபாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி கையாடல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் லாலுவுக்கு கடந்த ஜனவரி 24-ம் தேதி 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதுதவிர லாலுவுக்கு எதிரான மேலும் 2 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. உடல் குறைவால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தும்கா கருவூலத்தில் மோசடி செய்து பணம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 19 பேரின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x