Published : 09 Sep 2014 07:21 PM
Last Updated : 09 Sep 2014 07:21 PM
பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டும் திட்டமான, கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு இஸ்ரேல் உதவ முன்வந்துள்ளது.
மாசுபட்டுள்ள கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ‘நமாமி கங்கா’ என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா வந்துள்ள இஸ்ரேலிய பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் தலைவர் யோனாதன் பென் ஜேகன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறும்போது,
“இத்திட்டம் தொடர்பாக இந்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி மற்றும் அத்துறையின் செயலாளரை நாங்கள் ஏற்கெனவே சிலமுறை சந்தித்து பேசியுள்ளோம். இத்திட்டத்தில் நாங்களும் பங்கேற்க விரும்புகிறோம். இத்திட்டத்துக்காக எங்களின் அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “கழிவுநீரை சுத்தம் செய்து அதை தொழிற்சாலைக்கும் விவசாயத்துக்கும் பயன்படுத்துவதில் இஸ்ரேல் நிபுணத்துவம் பெற்றுள்ளது. எனவே நாங்கள் இது தொடர்பாக பேசிவருகிறோம். கங்கையில் ஆலைக்கழிவுகள் கலப்பதை தடுத்து, அக்கழிவுகளை சுத்தம் செய்வதுதான் இந்திய அரசின் முன்னுரிமைப் பணியாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
‘நமாமி கங்கா’ திட்டம் தொடர்பாக முதல் உயர்நிலைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்திய மோடி, புதிதாக கழிவுகள் கலப்பதை தடுப்பற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT