Published : 07 Mar 2018 09:20 AM
Last Updated : 07 Mar 2018 09:20 AM
காயமடைந்த நிலையிலும் துப்பாக்கியேந்திய 4 மாவோயிஸ்ட்களுடன் எந்த ஆயுதங்களும் இல்லாமல் வெறும் கைககளுடன் போராடி வெற்றி கண்டுள்ளார் மாநில அதிரடிப் படை வீரர் ஒருவர்.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி போலீஸ் தலைமையகத்தில் மாநில அதிரடிப் படை வீரராக பணியாற்றி வருபவர் கோம்ஜி மட்டாமி (33). இவரது சொந்த ஊர் மட்ஸ்கா ஆகும்.
இவர் எட்டபள்ளி தாலுகா ஜாம்பியா கட்டா போலீஸ் சோதனைச்சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிமுடிந்த பின்னர் கோம்ஜி தனது கிராமத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென 4 நக்சலைட்கள் அவரை வழிமறித்து துப்பாக்கி முனையில் மிரட்டி மண்டி போடவைத்தனர். ஒரு நக்சலைட், கோம்ஜியை நோக்கி சுட முயன்றார். ஆனால் அந்த துப்பாக்கி வேலை செய்யவில்லை. இந்த நேரத்தில் சுதாரித்த கோம்ஜி, தன்னைப் பிடித்திருந்தவனை நோக்கி குத்து விட்டார். இதில் அந்த மாவோயிஸ்ட் கீழே விழுந்ததும் எதிரில் நின்றிருந் மாவோயிஸ்ட் மீது காலால் உதை விட்டார்.
அப்போது பக்கத்திலிருந்த மாவோயிஸ்ட், கோம்ஜியின் மார்பில் கத்தியால் குத்தினார். இதனால் கோம்ஜியின் கையிலிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி கீழே விழுந்தது. அந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மாவோயிஸ்ட்கள் ஓட முயன்றனர். ஆனால் கோம்ஜி சுதாரித்துக் கொண்டு அவர்களைத் தாக்கினார். மார்பில் காயம் பட்டு ரத்தம் வழிந்த நிலையிலும் வெறும் கைகளுடன் அவர்களுடன் தீரமாக போரிட்டார் கோம்ஜி. பின்னர் துப்பாக்கி வைத்திருந்த மாவோயிஸ்டை தாக்கி அவனிடமிருந்து அந்த ஆயுதத்தை பறித்தார். கோம்ஜியின் தாக்குதலால் பலமிழந்த அவர்கள் தப்பி ஓடினர்.
கோம்ஜி, தற்போது கட்சிரோலியிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த நிலையிலும் வெறும் கைகளால் ஆயுதங்களுடன் இருந்த மாவோயிஸ்ட்களுடன் தீரமாக சண்டையிட்ட கோம்ஜிக்கு அடுத்த ஆண்டு வீரதீரச் செயல் விருது கிடைக்கும் என்று சக கமாண்டோக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT