Published : 30 Mar 2018 12:43 PM
Last Updated : 30 Mar 2018 12:43 PM
வடக்கு காஷ்மீரில் பள்ளிக்கூடம் கட்ட ரூ.40 லட்சம் வழங்கியுள்ள கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று மெகபூபா முப்தி ட்விட்டரில், ''தனது எம்.பி. நிதியிலிருந்து காஷ்மீரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தொகை ஒதுக்கியதற்காக மிக்க நன்றி @sachin_rt. தற்போது அவர் மைதானத்தில் விளையாட வில்லை என்றாலும் எல்லோருக்கும் தூண்டுகோலாக இருப்பதை எப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்'' என்று பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்ற உறுப்பினர் ஊரக மேம்பாட்டு நிதியிலிருந்து வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாராவில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ரூ.40 லட்சம் வழங்கியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், மாவட்ட நீதிபதிக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் (மும்பை புறநகர் மாவட்ட அலுவலகம், மாவட்ட திட்டக்குழு) வழங்கியுள்ள ஒரு கடிதத்தில், ட்ரக்முல்லாவில் 2007ல் நிறுவப்பட்ட உள்ள இம்பீரியல் கல்வி நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அப்பள்ளிக்கு நிதி ஒதுக்கும்படியும் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் அளித்துள்ள அக்கோரிக்கை கடிதத்தில், வகுப்பறைகள் 10, ஆய்வுக்கூடங்கள் 4, பள்ளி நிர்வாகத்திற்கான ஒரு தனி பிளாக், கழிவறைகள் 6 மற்றும் அசெம்ப்ளி / பிரேயர் கூடம் ஆகியவற்றையும் குறிப்பிட்டு நிதி ஒதுக்கப்படுவதற்கான வேலை விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ட்ரக்முல்லாவில் அமைந்துள்ளது. ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரையிலுள்ள இப்பள்ளியில் தற்போது 1,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT