Published : 29 Mar 2018 05:59 PM
Last Updated : 29 Mar 2018 05:59 PM
ஜிசாட் 6ஏ தகவல் தொடர்பு செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் செயற்கைகோள் புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நம் நாட்டின் சொந்த தேவைகளுக்காக மட்டுமின்றி, வணிக ரீதியாகவும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலமாக செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளான, ஜிசாட்-6ஏ இன்று மாலை 4.56-க்கு விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த செயற்கைகோள் வெற்றிகரமாக புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக் கோள் தொலை தொடர்பு சேவைக்கு பெரிதும் உதவும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் இந்தியாவின் 12-வது ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும். முன்னதாக, ஜிசாட் 6 தொலைதொடர்பு செயற்கைக் கோள் 2015 ஆகஸ்ட் 27-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT